Last Updated : 22 Apr, 2025 06:21 AM

 

Published : 22 Apr 2025 06:21 AM
Last Updated : 22 Apr 2025 06:21 AM

கடந்து செல்லும் ஆசிரியர்! | வகுப்பறை புதிது 16

இன்றைய கல்விச் சூழலில் எந்த மாணவர் மீதும் வெறுப்பை எவ்விதத்திலும் வளர்த்துக்கொள்ளாமல் தப்பிக்கும் ஒருவரே நிலையான ஆசிரியராக இருக்க முடியும் - ஜிம் கிராலி ஹம்ப்ரி கார்பென்டர் எழுதிய ‘மிஸ்டர் மாஜிக்கா’ நாவலில் ஆசிரியர் தொடர்ந்து தன் வகுப்பில் தொல்லை கொடுக்கும் ஒரு மாணவனை ஆத்திரத்தோடு தன் மந்திரத்தின் மூலம் தவளையாக மாற்றிவிடுவார்.

திரும்ப அந்த மாணவனை மனிதனாக்கும் மந்திரத்தை அவர் மறந்து போவார். பள்ளி விடும் நேரம் வந்துவிடும். அளவுக்கு அதிகமாகத் தான் கோபப்பட்டதை நினைத்து நினைத்து அப்போது வருந்துவார். இன்றைக்குப் பல ஆசிரியர்களின் நிலை இதுவே.

சிக்க வைக்கும் சிக்கல்கள்: ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை ஆக்கப்பட்டுள்ளது. பழைய கால கல்வி முறைபோல குழந்தைகளை அடிப்பதும், வசை பாடுவதும் சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜிம் கிராலி இங்கிலாந்தில் உள்ள பாத் ஸ்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்.

ஆசிரியர்கள் அன்றாட வகுப்பறை சிக்கல்களைக் கோபமின்றி கடந்து செல்வது எப்படி என்பது குறித்து, “உள்ளே அடி ஆழத்தில்: கட்டாய கல்வி அறிமுகமான பிறகு ஆசிரியர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான கையேடு” எனும் புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். இதில் இன்றைய கல்வி முறை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒருவருக்கு ஒருவரை எதிரியாக நிறுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்.

ஆசிரியர் பலம் வாய்ந்தவராக வயதில் மூத்தவராக இருக்கலாம். ஆனால், குழந்தைகள்தான் உரிமைகளோடும் சட்டத்தின் பாதுகாப்போடும் அங்கே அமர்ந்து இருக்கிறார்கள். அதேபோன்று கடந்த கால பெற்றோர் போல இன்றைக்கு இல்லை. இவர்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த ஒட்டுதலோடு இருக்கிறார்கள். இது வெறும் பாசம் சம்பந்தமானது மட்டுமல்ல. தன்னுடைய குழந்தையை எதிர்காலத்துக்கான முதலீடாகவும், வீடு போன்ற சொத்தாகவும் இன்றைய பெற்றோர் கருதுகிறார்கள்.

ஒரு வகுப்பறையில், சக மாணவர்களை முரட்டுத்தனமாகத் தாக்குகின்ற மாணவரின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். சட்டென்று அந்த மாணவரை அடக்குவதற்காகத் தன்னையும் மீறி அங்கிருக்கும் ஆசிரியர் மாணவரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.

உடனே அந்த முரட்டு மாணவர் காதைப் பிடித்துக்கொண்டு வலிக்கிறது என்று துடிக்கிறார். இந்த நிலையில் தலைமையாசிரியர் உள்பட மேலதிகாரிகள், பெற்றோர்கள், சமூகம் ஊடகங்கள் என அனைவரையும் பொறுத்த வரையில் சக மாணவர்களைத் தாக்கிய அந்த மாணவரை விட அதிகமாகக் கண்டனத்துக்குரியவர் அந்த ஆசிரியரே. மாணவரின் ஒழுங்கீனம் மறக்கப்பட்டு, ஆசிரியரின் குற்றம் பெரிதாக்கப்பட்டுவிடுகிறது.

இப்போது அந்த ஆசிரியர்தான் மாணவரிடமும் பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். சட்டம் ஆசிரியர் மீது பாயும். இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்களைக் கடந்து செல்லும் ஆசிரியரே இன்றைக்குத் தேவை என்பதுதான் இந்த நூல் ஆசிரியரின் வாதம்.

எதையும் கண்டு கொள்ளாதீர்கள் என்று அவர் சொல்லவில்லை மாறாகத் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இதுபோன்ற சூழல்களை சக ஆசிரியர்களின் உதவியோடு அல்லது தலைமை ஆசிரியரின் நேரடி தலையீட்டின் மூலம் மூன்றாம் நபர்களுக்கான சிக்கலாக அதை மாற்றி ஒரு ஆசிரியர் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

தேவையான அணுகுமுறை: முரண்டு பிடிக்கும் தன்னுடைய நோயாளிகளைக் கன்னத்தில் ஓங்கி அறையும் மருத்துவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? தன்னிடம் நகை வாங்க வந்த ஒருவர் தன்னை எதிர்த்துப் பேசிவிட்டார் என்பதற்காக முட்டி போட வைக்கும் நகை வியாபாரியைப் பார்த்தது உண்டா? அதே அணுகுமுறைதான் ஆசிரியருக்கும் இன்று தேவை.

ஏனெனில் உலகெங்கும் இன்று கடைப்பிடிக்கப்படும் கல்விமுறையில் ஒவ்வொரு ஆசிரியரும் அறிவு விற்பனையாளர், ஒவ்வொரு மாணவரும் கல்வி நுகர்வோர். இதைப் புரிந்து கொண்டு தன்னை சட்டப்படி சிக்க வைக்கும் சூழல்களைக் கடந்து செல்லும் ஆசிரியராக இருப்பதே புத்திசாலித்தனம் என்பது எவ்வளவு பெரிய உண்மை.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x