Published : 01 Jan 2023 06:06 PM
Last Updated : 01 Jan 2023 06:06 PM

ஆங்கிலப் புத்தாண்டு |  சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் 

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தைக் காண திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம், முக்கடல் சங்கமத்தைக் காண வழக்கமாக இங்கு வார விடுமுறை நாட்களில் மக்கள் பெருமளவில் வருகை தருவர். இந்த முறை ஆங்கிலப் புத்தாண்டு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்ததால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்தனர்.

கன்னியாகுமரி கடற்கரையில், காலையிலேயே ஆண்டின் முதல் சூரிய உதயத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர். அதேபோல், அங்குள்ள படகு முகாமில் இருந்து கடலில் உள்ள விவேகானந்தர் பாறை உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் படகுகளில் சவாரி செய்து கண்டு ரசித்தனர்.

குற்றாலம்: தென்காசி மாவட்டம் குற்றாலம், தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போதும் மகிழ்ச்சியளிப்பவை. ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்று, குற்றாலத்துக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்து தங்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வெள்ளிக்கிழமை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.

புதுச்சேரியில் பாரடைஸ் கடற்கரைக்கு படகு சவாரி செய்து மகிழ்ந்த மக்கள் | படங்கள்:எம்.சாம்ராஜ்

கொடைக்கானலில் உள்ள, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோகர்ஸ் வாக், தொப்பித்தூக்கிப் பாறை, கொடைக்கானல் ஏரி, உள்ளிட்ட இடங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். படகு சவாரி, குதிரை ஏற்றம், சைக்கிளிங் என சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வகைகளில் புத்தாண்டுத் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால், கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒகேனக்கல் அருவி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் நீராடவும், பரிசல்களில் பயணம் செய்யவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இதனால், அருவி பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். பரிசல் பயணம் செய்தும், அங்குள்ள பூங்காக்களிலும் சுற்றுலாப் பயணிகள் ஆங்கிலப் புத்தாண்டை தங்களது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புதுச்சேரி: இதேபோல், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுபுதுச்சேரியில் சுண்ணாம்பாறு படகு குழாமில் இருந்து படகுகள் மூலம் பாரடைஸ் பீச்சுக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் தங்கள் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர் விடுமுறை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு காரணமாக படகுகளில் சவாரி செய்ய அதிக அளவில் மக்கள் கூட்டம் வந்ததையடுத்து நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து படகு சவாரி செய்து சுற்றுலாப்பயணிகள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுதவிர, சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கோவளம், மாமல்லபுரம், கடலூர் வெள்ளிக் கடற்கரை, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, உதகை, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி, ஏலகிரி, ஏற்காடு, கொல்லிமலை, உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் சென்று சுற்றுலாத் தலங்கலைக் கண்டு ரசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x