Published : 20 Sep 2025 06:03 AM
Last Updated : 20 Sep 2025 06:03 AM
சென்னை: ஊட்டி, கொடைக்கானல் போல வால்பாறைக்கு செல்லவும் நவ.1-ம் தேதி முதல் இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த இரு இடங்களிலும் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வனத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி, ஐஐடி மற்றும் ஐஐஎம் சார்பில் இடைக்கால அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கைகளில் கொடைக்கானல், ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க வேண்டும், அரசு போக்குவரத்தை பயன்படுத்த சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டன.
மேலும் டிசம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த ஆய்வு குழுவினருக்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் விதமாக தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அப்போது ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதால் சுற்றுலா ப்பயணிகள் தற்போது வால்பாறையில் அளவுக்கு அதிகமாக குவிந்து வருவதாக இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ” ஊட்டி, கொடைக்கானலை விட வால்பாறை, டாப்சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் போன்றவை சுற்றுச்சூழல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்.
எனவே வால்பாறைக்கு செல்ல வரும் நவ.1-ம் தேதி முதல் இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்தி சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல வால்பாறை, டாப்-ஸ்லிப் பகுதிகளுக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லாத வகையில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.31-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT