Published : 10 Sep 2025 07:15 PM
Last Updated : 10 Sep 2025 07:15 PM
சென்னை: கன்னியாகுமரி விவேகானந்தர் சிலை - திருவள்ளுவர் சிலை இடையிலான கண்ணாடிப் பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும், விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இது குறித்து, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது, “கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் கட்டப்பட்ட பிறகு சுமார் 17 லட்சம் பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். அவ்வப்போது முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டபோது, 8 மீட்டர் உயரத்தில் ஆர்ச்சில் உள்ள போல்டுகளை சரி செய்யும் பொழுது சுத்தியல் கை தவறி விழுந்ததில் கண்ணாடியின் மேல் பகுதியில் மட்டும் மெல்லிய விரிசல் ஏற்பட்டது. உடனடியாக சேதமடைந்த இடத்தில் மட்டும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி தடுப்பு அமைக்கப்பட்டது.
விரிசல் ஏற்பட்ட இடத்தில் 2 மீட்டர் நீளம், 2.40 மீட்டர் அகலம், கொண்ட அதே வடிவமைப்பில் அதே தரத்துடன் கம்பி இழையிலான கண்ணாடி கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பொருத்தப்பட்டது. மேலும், போதுமான எடையைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாங்குத்திறன் உறுதி செய்யப்பட்டதில் கண்ணாடி பாதுகாப்பாக உள்ளது. 77 மீட்டர் நீளமுடைய கண்ணாடி பாலம், ஒரேநேரத்தில், 650 பேர் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்ததாரரின் பராமரிப்பு காலம் 10 ஆண்டு என்பதால், சேதமடைந்த கண்ணாடி ஒப்பந்ததாரரின் செலவிலேயே சரிசெய்யப்பட்டுவிட்டது. தற்போது, அனைத்து பார்வையாளர்களும், கண்ணாடி பாலத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT