Published : 30 May 2025 01:26 PM
Last Updated : 30 May 2025 01:26 PM
குன்னூர்: காட்டேரி பூங்காவில் முதல்முறையாக தொடங்கியுள்ள மலைப்பயிர்கள் காட்சியின் சிறப்பு அம்சமாக தமிழர்களின் வாழ்வை பறைசாற்றும் வகையில் கிராம புற வாழ்க்கை காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களை மகிழ்விக்கும் நோக்கில் பல்வேறு காட்சிகள் தோட்டக்கலைத் துறை மூலமாக நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக மலைப்பயிர்கள் காட்சி இன்று காட்டேரி பூங்காவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார். இந்த முதல் மலைப்பயிர்கள் காட்சியின் சிறப்பம்சமாக தமிழர்களின் வாழ்வை பறைசாற்றும் வகையில் கிராமபுற வாழ்க்கை காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
தேயிலை, காப்பி, வெற்றிலை, முந்திரி, தென்னை, பனை, கோகோ, எண்ணெய்பனை, பாக்கு மற்றும் நுங்கு போன்ற பத்து வகை மலைப்பயிர்களை கொண்டு தமிழ்நாட்டு கிராமப்புற மக்களின் குடிசை வீடும், வீட்டின் முன் ஆடு, கோழி, கன்றுக் குட்டி, அம்மிகல், ஆட்டு கல், உரல், பனை மரம் போன்ற உருவ அமைப்புகள் நம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புற சிறுவர்கள் விளையாடிய விளையாட்டுகளான நுங்கு வண்டி மற்றும் சறுக்கு விளையாட்டு போன்றவை காட்சி படுத்தப்பட்டுள்ளன. மலைப் பயிர்கள் காட்சியை முன்னிட்டு தேயிலை பயிரிடும் விவசாயிகளுக்கென பிரத்யேகமாக 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறு கிறது.
மலைப் பயிர்கள் காட்சி மேம் 30ம் தேதி (இன்று) முதல் ஜூன் 1ம் வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து இக்காட்சியை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT