Published : 28 May 2025 05:35 PM
Last Updated : 28 May 2025 05:35 PM
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை முதல் கீதாபுரம் வரை மற்றும் ஓடத்துறையில் இருந்து ரயில்வே பாலம் வரை என 2 இடங்களில் "வாட்ச் டவருடன்" கூடிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
திருச்சி மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக ஸ்ரீரங்கம் - சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் காவிரிப் பாலம் விளங்கு கிறது. தினந்தோறும் மாலையில், குறிப்பாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காவிரி ஆற்றின் அழகை ரசிக்கவும், காற்று வாங்கவும் இங்கு பெருங்கூட்டம் கூடுவது வழக்கம். ஆனால், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் இடையே பிரதான போக்குவரத்து பாலமாக இருப்பதால், பொழுதுபோக்க வருபவர்களுக்கு ஆபத்து மற்றும் சவால்கள் நிறைந்ததாகவே உள்ளது.
மேலும், காவிரி படித்துறை பகுதிகள் புனித நீராடுவது மற்றும் புண்ணிய சடங்குகள் செய்வது போன்றவற்கு பயன்படுத்தப்படுவதால், பொழுது போக்குக்காக வருபவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்வது இல்லை.
அதே நேரத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லாத நாட்களில், காவிரி ஆற்றுக்குள் நடத்தப்பட்ட ‘சம்மர் பீச்’ என்ற நிகழ்வை நினைவுகூரும் திருச்சி மாநகர மக்கள், காவிரியின் அழகை ரசிக்கும் வகையில் கரையோரத்தில் ஒரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதுவும் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ‘காவிரிக் கரையோரத்தில் கலங்கரை விளக்கத்துடன் பூங்கா’ என்ற அசத்தலான ஒரு திட்டத்தை திருச்சி மாநகராட்சி விரைவில் செயல்படுத்த உள்ளது. அதன்படி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை முதல் கீதாபுரம் தடுப்பணை வரை உள்ள 750 மீட்டர் தொலைவுக்கும், ஓடத்துறை மேம்பாலம் முதல் ரயில்வே பாலம் வரை சுமார் 1.5 கி.மீ தொலைவுக்கும் ஆற்றங்கரையோர பூங்கா அமைப்பது என திட்டமிட்டுள்ளது.
இந்த 2 பூங்காக்களின் மொத்த நீளம் 2.2 கி.மீ. இதில் குழந்தைகள் பூங்கா, நடைபயிற்சிக்கான பாதைகள், கலங்கரை விளக்கங்கள், கண்காணிப்பு கோபுரம், பொழுதுபோக்கு பகுதி மற்றும் புனித நீராடுதல் மற்றும் சடங்குகளைச் செய்வதற்கான இடங்கள் போன்றவை அடங்கும்.
ஓராண்டில் முடியும்: காவிரிக் கரையோர பூங்கா குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ”ஸ்ரீரங்கம் காவிரிக் கரையின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உருவாக்கப்பட உள்ள கரையோர பூங்கா குறித்த முழு திட்ட வரைவும் மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ஜெர்மன் நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கியிடம் (கே.எஃப்.டபிள்யூ) ரூ.37 கோடி நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
விரைவில் நிதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிதி கிடைத்தவுடன், இந்தாண்டு இறுதியில் பணிகளை தொடங்கி, ஓராண்டுக்குள் பணிகளை முழுவதுமாக முடித்துவிடுவோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT