Published : 26 May 2025 06:09 PM
Last Updated : 26 May 2025 06:09 PM
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 பெரியவர்கள், 24,599 சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 779 . சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் அழகை ரசிக்க வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க்காட்சி கடந்த 15-ம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த வருடம் 127-வது மலர்க்காட்சியில் சுமார் 40,000 மலர்த் தொட்டிகள் தயார்படுத்தப்பட்டு பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் மலர்களைக் கொண்டு மலர் அலங்காரம் மலர் மாடத்தில் அமைக்கப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற 127-வது மலர்க்காட்சியின் சிறப்பம்சமாக பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையிலும் சிறுவர்களைக் கவரும் வகையிலும் 70 அடி நீளம் 20 அடி உயரம் பிரம்மாண்டமான அரண்மனை நுழைவு வாயில் வடிவமைப்பு 1,30,000 மலர்களால் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் 75 அடி நீளம், 25 அடி உயரத்தில் கார்னேசன் ரோஜா சாமந்தி போன்ற 2,00,000 மலர்களால் ஆன சோழ அரசர் கால அரண்மனை அமைப்பும் மிக பிரம்மாண்டமான வகையில் வடிவமைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டது.
அத்துடன் 8 அடி உயரம் 35 அடி நீளம் கொண்ட அன்னபட்சி 50,400 சாமந்தி மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 4,000 மலர்த்தொட்டிகள் மற்றும் 35,000 சாமந்தி, ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்லணை பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பண்டைய கால சிம்மாசனம், ஊஞ்சல், கண்ணாடி இசைக் கருவிகள், பீரங்கி, யானை, புலி, சதுரங்க அமைப்பு போன்ற மலர் அலங்கார வடிவமைப்புகளும் இவ்வாண்டு மலர்க்காட்சியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் பூங்கா ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் மொத்தம் 149 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மலர்க்காட்சியில் நடைபெற்ற போட்டிகளில் 199 போட்டியாளர்கள் பங்குபெற்றனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 40 நபர்களுக்கு சுழற்கோப்பைகளும், 233 நபர்களுக்கு முதல் பரிசுகளையும், 186 நபர்களுக்கு இரண்டாம் பரிசுகளையும் மற்றும் 76 நபர்களுக்கு மூன்றாம் பரிசுகளை வழங்கப்பட்டன.
மலர்க்காட்சி நடந்த 11 நாட்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 பெரியவர்கள், 24,599 சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 779 சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பெபிதா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT