Published : 23 May 2025 02:18 PM
Last Updated : 23 May 2025 02:18 PM
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக் கண்காட்சியானது இன்று (மே 23) முதல் மே 26 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து இக்காட்சியினை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியாவின் தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் வருடம் தோறும் தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 65-வது பழக் கண்காட்சி இன்று குன்னூர் சிம்பூங்காவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்வாண்டு பழக் கண்காட்சியின் சிறப்பம்சமாக எலுமிச்சை பழங்களைக் கொண்டு பிரம்மாண்ட எலுமிச்சை வடிவமைப்பு, பழரசக்கோப்பை, கடற்கரை குடை, கார், பழ கேக், பழ ஐஸ்கிரீம், தொப்பி, விசில் கண்ணாடி, நீர் சறுக்கு மட்டை, பழ கூடைப்பந்து மற்றும் இளநீர் போன்ற வடிவமைப்புகள் 3.8 டன் எடையுள்ள பல்வேறு பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களின் பழ வகைகளை பறைசாற்றும் விதமாக பல்வேறு காட்சி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கரூர், வேலூர், திருப்பத்தூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை சார்ந்த தோட்டக்கலை துறையினரால் பல்வேறு பழங்களை கொண்டு விதவிதமான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவ்வருடம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் தோட்டக்கலைத்துறையின் மூலம் நடத்தப்படவுள்ளது. 65வது பழக் கண்காட்சியானது இன்று(மே 23) முதல் மே 26 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து இக்காட்சியினை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT