Published : 18 May 2025 04:12 PM
Last Updated : 18 May 2025 04:12 PM
திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 24-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 9 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு கோடை சீசன் தொடங்கியது முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் மாலை வேளையில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மலைப்பகுதியில் இயற்கை எழில் காட்சிகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவது என சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் கொடைக்கானலில் கோடைவிழா, மலர்கண்காட்சி நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கொடைக்கானலில் நடைபெற்றது.
திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் நடராஜன், சுற்றுலாத்துறை அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் ஆட்சியர் செ.சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொடைக்கானலில் கோடைவிழா, மலர்கண்காட்சி மே 24 தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் வகையில் பரதநாட்டியம், சிலம்பம், விளையாட்டு போட்டிகள், படகுப் போட்டி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சியை காண நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.75, சிறியவர்களுக்கு ரூ.35 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை, சுற்றுலாத்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT