Published : 08 May 2025 05:31 AM
Last Updated : 08 May 2025 05:31 AM

களைகட்டவுள்ள கோடை விழாக்கள்: ஏற்காட்டில் 2 லட்சம் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்

ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ள மலர்கள். | படம்:ஆர்.டி.சிவசங்கர் |

சேலம் / ஊட்டி: ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நடைபெறும் மலர்க் கண்காட்சிக்காக தோட்டக்கலைத் துறைப் பூங்காக்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகளில் தற்போது மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மலைவாசஸ்தலங்களில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படும். ஏற்காடு கோடை விழா குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஏற்காடு மலர்க் கண்காட்சிக்காக டேலியா, ஜெர்பைரா, மேரிகோல்டு, லில்லியம் என பல்வேறு வகையிலான மலர்ச் செடிகள் ஏற்கெனவே நடவு செய்யப்பட்டிருந்தன. ஏற்காடு அண்ணா பூங்கா, 2 தாவரவியல் பூங்காக்கள், ரோஜாத் தோட்டம், ஏரிப் பூங்கா உள்ளிட்டவற்றில் வைப்பதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள செடிகள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.

பூங்காக்களை சீரமைத்து, மலர்க் கண்காட்சிக்கான சிற்பங்களை வைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 10-க்கு மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, மலர்ச் சிற்பங்கள் அமைத்தல், கண்ணாடி மாளிகை தோட்டத்தை அழகுபடுத்துவது, பூங்காக்களில் அலங்காரம் உள்ளிட்ட பணிிகள் நடைபெற்று வருகின்றன.

கோடை விழா தேதி அறிவிக்கப்பட்டதும், விழாவில் வைக்க வேண்டிய மலர்ச் சிற்பத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கடந்த ஆண்டுகளைவிட நடப்பாண்டு ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனறு எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் உள்ள
மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.

10 நாட்களுக்கு நீட்டிப்பு: நீலகிரி மாவட்டத்தில்‌ கோடை விழாவையொட்டி காய்கறிக் கண்காட்சி கோத்தகிரியில் கடந்த 3, 4-ம் தேதிகளில் நடைபெற்றது. வாசனை திரவியக் கண்காட்சி கூடலூரில் நாளை (மே 9) முதல்‌ 11-ம் தேதி வரையும், ரோஜா கண்காட்சி அரசு ரோஜாப் பூங்காவில் வரும் 10 முதல்‌ 12-ம் தேதி வரையிலும், மலர்‌க் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல்‌ பூங்காவில் வரும் 16 முதல்‌ 21-ம் தேதி வரையிலும், பழக் கண்காட்சி குன்னூர்‌ சிம்ஸ்‌ பூங்காவில் வரும் 23- முதல் 25-ம் தேதி வரையும் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர்க் கண்காட்சியை கண்டு ரசிக்கும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 5 நாட்கள் நடைபெறவிருந்த மலர்க் கண்காட்சி 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "கல்லாறு, குஞ்சப்பனை, மேல்கூடலூர், மசினக்குடி, கெத்தை ஆகிய 5 சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், அனைத்து சுற்றுலா பயணிகளும் கட்டாயம் இ-பாஸ் பதிவு செய்துவர வேண்டும். 127-வது ஊட்டி மலர்க் கண்காட்சியை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x