Published : 05 May 2025 05:00 AM
Last Updated : 05 May 2025 05:00 AM

கோடை விழாவுக்காக கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் மலர்கள்

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்களை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடைவிழா மலர்க் கண்காட்சிக்குத் தயாராகும் வகையில் பிரையன்ட் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சியை வரும் 24-ம் தேதி தொடங்கி நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாகப் பெய்த மழையால் கொடைக்கானல் மலைப்பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது. வெள்ளிநீர் வீழ்ச்சி, கரடிச்சோலை அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை நீர்வீழ்ச்சி, ஓராவி அருவி, அஞ்சுவீடு அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

சுற்றுலாத் தலங்களான மோயர்பாய்ன்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நேற்று அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோடை சீசன் தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மலர்க் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் பல்வேறு வகையான பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு, தோட்டக்கலைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பனிப்பொழிவு, மழை ஆகியவற்றால் சேதமடையாமல் பூச்செடிகள் பாதுகாத்துப் பராமரிக்கப்படுகின்றன.

தற்போது பூச்செடிகள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. பல்வேறு வகையான பூச்செடிகள், பல வண்ணங்களிலான மலர்கள், கண்காட்சிக்கு முன்பே பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது. ஆண்டுதோறும் ஊட்டியில் மலர்க் கண்காட்சி தொடங்கிய பிறகே கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி மே மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, வரும் 24-ம் தேதி கோடைவிழா, மலர்க் கண்காட்சி தொடங்கி 10 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுலாத் துறையினர், தோட்டக்கலைத் துறையினர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x