Published : 04 May 2025 01:54 AM
Last Updated : 04 May 2025 01:54 AM

கோத்தகிரியில் காய்கறிகள் கண்காட்சி தொடக்கம்: சுற்றுலா பயணிகளை கவர்ந்த ‘ஜல்லிக்கட்டு காளை’

கோத்தகிரியில் நேற்று தொடங்கிய காய்கறிகள் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்த வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர் உருவம்.

நீலகிரி கோடை விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. 2.5 டன் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட உருவங்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டும். அப்போது லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால் கோடை விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு கோடை விழா நேற்று தொடங்கியது. வரும் 25-ம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி 16 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பூங்காவில் மலைப் பயிர்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான 13-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கண்காட்சியைத் திறந்துவைத்தார். இதில், தமிழர் பண்பாட்டை போற்றும் வகையில் 2.5 டன் எடையுள்ள கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளால் ஜல்லிக்கட்டு காளை உட்பட பல்வேறு வடிவங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உருளைக்கிழங்கில் வடிவமைக்கப்பட்ட சிலம்பாட்டம், கேரட், பீட்ரூட்-களால் தமிழ் மறவன், பட்டாம்பூச்சி, கத்திரிக்காய், கோவக்காய் மற்றும் பஜ்ஜி மிளகாயால் மரகதப் புறா, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாயால் வடிவமைக்கப்பட்ட பச்சைக்கிளிகள் மற்றும் சுக்கினி, கோவக்காய், பச்சை சிவப்பு மிளகாய், முள்ளங்கி, கேரட்டால் தஞ்சாவூர் பொம்மை, சேனைக்கிழங்கால் நீலகிரி வரையாடு உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தன.

மேலும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் பல்வேறு வகையான காய்கறிகளால் ஆன பாண்டா கரடி, இருவாச்சி பறவை, திருவள்ளுவர், பூவிலிருந்து தேன் எடுக்கும் தேனீ, புலி, மாட்டு வண்டி , சிங்கம், கழுகு ஆகிய வடிவங்களும், நீலகிரி மற்றும் சமவெளிப் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

முதல் நாளான நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சி தொடக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, கோத்தகிரி நேரு பூங்கா தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x