Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM
கல்லூரிகளில் இந்த பருவத் தேர்வுகளை நேரடியாக நடத்தாமல் ஆன்லைனில் நடத்த வேண்டும். இதைவலியுறுத்தி போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
ஓ.பன்னீர்செல்வம்: கல்லூரிகளில் செப்டம்பர் முதல் நேரடிவகுப்புகளை தொடங்க அரசு உத்தரவிட்டாலும், பெரும்பாலான கல்லூரிகளில், இடப் பற்றாக்குறையால், சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில்தான் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பருவத்துக்கான பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. முதலாண்டு மாணவர்களுக்கு தற்போதும் ஆன்லைன் வகுப்புகள்தான் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.
இந்த சூழலில், கல்லூரி பருவத் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோரிடம் அதிர்ச்சி, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பருவத் தேர்வுக்கான பாடங்கள் இன்னும் முடிக்கப்படாத நிலையில், நேரடி தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும். ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டால் மட்டுமே ஓரளவுக்கு மதிப்பெண் பெற முடியும். எனவே ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள், பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அறவழியில் போராட்டம் நடத்தும் மாணவர்களை அழைத்துப் பேசாமல் அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. முதல்வர் இதில்தலையிட்டு, மாணவர்களை அழைத்துப் பேசி, இந்த ஆண்டுக்கான பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்தவும், மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி: கல்லூரிகள் திறந்துஇரண்டரை மாதங்களே ஆகின்றன. அதனால், முழுமையாக நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. பண்டிகைக் காலம், பருவமழை எனகல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், கல்லூரி மாணவர்களுக்கு இந்த பருவத்துக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை. பருவத் தேர்வுக்கு முன்புநடத்தப்படும் மாதிரி தேர்வுகளும் இதுவரை நடத்தப்படவில்லை என்று மாணவர்கள் கூறுகின்றனர்.
மேலும், மாணவர்கள், பேராசிரியர்களுக்கு இந்த பருவத்துக்கான பாடத் திட்டம் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் முழுமையாக நடக்கவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன. பல மாணவர்கள் 2 தவணை தடுப்பூசி போடாததால் கல்லூரிகளுக்கு வரவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.
கடந்த 3 நாட்களாக பல மாவட்டங்களில் மாணவர்கள் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தமுறையும் ஆன்லைன் தேர்வுகளே நடத்த வேண்டும் என்று கோரி, ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து, நடக்கஉள்ள இந்த ஒரு பருவத் தேர்வுகளை மட்டும் நேரடியாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்த வேண்டும். மாணவ, மாணவிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT