Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் - ரூ.24 கோடி மதிப்பில் மாணவர் விடுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் :

சென்னை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.23.78 கோடியில்கட்டப்பட்ட விடுதி மற்றும் பள்ளிக்கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், 23 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் ரூ.23 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில், 10 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ,மாணவியருக்கான விடுதிக்கட்டிடங்கள், 3 பள்ளிக்கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

பணி நியமன ஆணைகள்

மேலும், கால்நடை பராமரிப்புத்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் க.மணிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை செயலர் தெ.சு.ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x