Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

டாஸ்மாக் கடைகள் திறக்க பாஜக எதிர்ப்பு - மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? : அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

திருச்சி

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று (ஜூன் 14) மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு, மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? என கேள்வியெழுப்பினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதை தொடங்கிவைத்த மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதை பாஜக எதிர்ப்பது குறித்து கேட்டபோது, அமைச்சர் கே.என்.நேரு கூறியது: பாஜக ஆளும் மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மதுக்கடைகளை திறந்துவிட்டு, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது. பாஜக செய்தால் நல்லது, நாங்கள் செய்தால் தவறா? மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா?. ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளில் டாஸ்மாக் கடை திறப்பும் ஒன்று.

அனைத்தையும் ஏற்க முடியாது

கூட்டணிக் கட்சிகள் சொல்லும் அனைத்தையும் ஏற்க முடியாது. அனைத்தையும் ஆராய்ந்துதான் அரசு முடிவு எடுக்கும். டாஸ்மாக் கடை திறப்பு விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை முதல்வர் அழைத்துப் பேசலாம். அவர்களையும் சம்மதிக்கக்கூட வைக்கலாம். ஆனால், எங்கள் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் வராது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x