Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

தஞ்சாவூரில் திமுக பிரமுகரிடம் வாக்குவாதம் செய்ததால் - ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட எஸ்.ஐ சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் :

மோகன்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் திமுக பிரமுகரிடம் வாக்குவாதம் செய்ததால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர், துறைரீதியான விசாரணைக்குப் பின்பு சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

தஞ்சாவூர் அண்ணா சிலை பகுதியில் கடந்த 10-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி, உரிய ஆவணம் இல்லாமல் வந்த ஒரு சுமை ஆட்டோவுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். அப்போதுஅங்கு வந்த திமுக மாநகரதுணைச் செயலாளர் நீலகண்டன்,அபராதம் விதித்ததைக் கண்டித்துசுமை ஆட்டோ ஓட்டுநருக்கு ஆதரவாக பேசினார்.

அங்கிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகன், ‘இதற்கெல்லாம் சிபாரிசுக்கு வரும் நீங்கள்நான் குடியிருக்கும் பகுதியில் 2 மாதமாக நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லை. அதை முதலில் செய்யுங்கள்’ எனகூறியுள்ளார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் பாரதிராஜன் விசாரணை நடத்தினார். அதன்பின்பு சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனை அன்று இரவே தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டார்.

இதனிடையே, நேற்று முன்தினம், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனிடம் மீண்டும் துறைரீதியான விசாரணை நடைபெற்றது. அதன்பின்பு, அன்று இரவு அவர் தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலையத்தின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டு உடனடியாக அங்கு சென்று பணியில் சேர்ந்தார். இச்சம்பவம் தஞ்சாவூர் போலீஸார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x