Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில், பயிற்சி பெற்று வந்த 5 டிஎஸ்பிக்களுக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற டிஎஸ்பிக்கள் 25 பேருக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிகள் நேற்று (22-ம் தேதி) முடிவடைய இருந்த நிலையில், பயிற்சி பெற்றவர்களில் சிலருக்கு காய்ச்சல், தலைவலி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 டிஎஸ்பிக்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியில் இருந்த மற்ற டிஎஸ்பிக்கள், பயிற்சி நிலைய முதல்வர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பயிற்சி நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணி முடிந்து மீண்டும் பயிற்சியைத் தொடர வந்தபோது, அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT