Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM
தஞ்சாவூரில் பிறந்து 7 நாட்களேயான இரட்டை பெண் குழந்தைகளை வீட்டில் இருந்து குரங்குகள் தூக்கிச் சென்ற நிலையில், அதில் ஒரு குழந்தை குளத்தில் வீசப்பட்டு உயிரிழந்தது. மற்றொரு குழந்தை குரங்கிடமிருந்து உயிருடன் மீட்கப்பட்டது.
தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டை அகழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(29), பெயின்டர். இவரது மனைவி புவனேஸ்வரி(26). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 7 நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளை நேற்று மதியம் வீட்டுக்குள் படுக்க வைத்துவிட்டு, கழிப்பறைக்கு புவனேஸ்வரி சென்றார். சிறிதுநேரத்தில் வீட்டுக்குள் குரங்குகளின் சத்தம் கேட்டதால், புவனேஸ்வரி உடனடியாக திரும்பி வந்து பார்த்தபோது, படுக்கையில் 2 குழந்தைகளும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே,வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, ஓட்டு வீட்டின் மேற்கூரையில் ஒரு குழந்தையை குரங்கு ஒன்று வைத்துக்கொண்டிருந்தது.
இதையடுத்து, புவனேஸ் வரியும், அக்கம்பக்கத்தினரும் சத்தம் போட்டதால், மேற்கூரையிலிருந்த குரங்கு, குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டது. அந்தக் குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். குரங்கு தூக்கிச் சென்றதால், அக்குழந்தையின் காலில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
பின்னர், மற்றொரு குழந்தையை தேடியபோது, வீட்டின் பின்புறம் உள்ள கோட்டை அகழி என்ற குளத்தில் குழந்தை கிடந்தது. இதனால், அந்தக் குழந்தையை மற்றொரு குரங்கு தூக்கிச் சென்று குளத்தில் வீசிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தக் குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
குரங்குகள் தொல்லை
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை அடிக்கடி வீட்டுக்குள் நுழைந்து, உணவுப் பொருட்கள், உடைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிடுகின்றன. எனவே, இந்தக் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினரிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT