Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM
ஆத்தூர் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் உள்ளிட்ட 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் கடந்த 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டுதல்படி கரோனா வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் தும்பல் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, ஆத்தூர் அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். மாணவிக்கு கரோனா பரிசோதனை செய்த நிலையில், பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும், சக மாணவிகள், ஆசிரியர்கள், விடுதி வார்டன்கள் உள்ளிட்ட 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை மாவட்ட துணை இயக்குநர் செல்வகுமார் கூறும்போது, “மாணவிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சக மாணவிகள் 25 பேர், விடுதி மாணவிகள் 36 பேர், ஆசிரியர்கள், வார்டன்கள் உள்ளிட்ட 76 பேர் தனிமைப்படுதப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பள்ளி மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT