Published : 28 Dec 2020 07:16 AM
Last Updated : 28 Dec 2020 07:16 AM

உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.28 லட்சம் நிதி வழங்கிய சக காவலர்கள்

தஞ்சாவூரில் காவலர் மோசஸ் மோகன்ராஜின் குடும்பத்துக்கு நேற்று ரூ.8.15 லட்சம் நிதியை வழங்கிய 2013-ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள்.

தஞ்சாவூர்

சாலை விபத்து, மாரடைப்பால் உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பங்களுக்கு, 2013-ம் ஆண்டு காவல் துறையில் தேர்வான சக காவலர்கள் ரூ.28 லட்சம் நிதி திரட்டி நேற்று வழங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் மோசஸ் மோகன்ராஜ்(29). இதேபோல், தருமபுரியைச் சேர்ந்தவர் காவலர் செந்தில்குமார். இவர்கள் எதிர்பாராதவிதமாக சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

இதேபோன்று, தூத்துக்குடியைச் சேர்ந்த காவலர் சத்தியலட்சுமி மாரடைப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

2013-ம் பேட்ஜ் காவலர்கள்

இவர்கள் 3 பேரும் 2013-ம் ஆண்டு காவலர்கள் பேட்ஜை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து, இவர்களின் குடும்ப ங்களுக்கு உதவ, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பணியாற்றி வரும் அதே ஆண்டில் காவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள் சக காவலர்கள் முடிவு செய்தனர். அதற்காக, அனைவரும் இணைந்து நிதி திரட்டினர்.

அதன்படி, வசூலான ரூ.28 லட்சம் நிதியில், தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் தெருவில் வசிக்கும் மோசஸ் மோகன்ராஜின் மனைவியிடம் ரூ.8.15 லட்சத்தை சக காவலர்கள் நேற்று வழங்கினர்.

இதேபோல, மீதியுள்ள நிதியை பங்கிட்டு, தருமபுரி செந்தில்குமார், தூத்துக்குடி சத்தியலட்சுமி ஆகியோரின் குடும்பங்களுக்கும் அந்தந்தப் பகுதியில் உள்ள 2013-ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள் நேற்று வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x