Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பை இழந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த லதா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மகள் தேவஷாலினிக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி சீட் கிடைத்தது.
ரூ.5.54 லட்சம் கட்டணம்
ஆண்டுக்கு ரூ.5.54 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றனர். ஏழ்மை நிலையால் நாங்கள் அவ்வளவு கட்டணம் செலுத்த முடியாது என்பதால் மருத்துவக் கல்வியில் சேரவில்லை.இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என நவ.21-ல் அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை முன்பே அறிவித்திருந்தால் மருத்துவராகும் எனது மகளின் கனவு நிறைவேறி இருக்கும். எனது மகளைப்போல, பல அரசுப் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் மருத்துவ சீட் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப வழங்கப்படும் சீட்டுகளில், மனுதாரரைப் போன்ற மாணவர்களுக்கு தர வரிசை அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார். இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT