Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

சமூக வலைதளங்களிலிருந்து இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து ‘இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசரை உடனடியாக நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த லெட்சுமி, உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனு: ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள வசனங்கள், காட்சிகள் ஆபாசமாகவும், முகம்சுளிக்கும் வகையிலும் உள்ளது.இப்படத்துக்கான போஸ்டரும் ஆபாசமாக வடிவமைக்கப்பட்டுஉள்ளது.

குழந்தைகள் பாதிப்பு

ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் ஆன்லைனில் படிப்பதால் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது. அப்போது, இப்படத்தின் டீசர் குறுக்கிடுவதால் குழந்தைகளின் கவனம் திசை திருப்பப்படுகிறது. எனவே இரண்டாம் குத்து படத்தின் டீசர், போஸ்டர்களை சமூக வலைதளங்கள், ஊடகங்களில் இருந்து நீக்கவும்,படத்தை வெளியிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு 32 காட்சிகள் வெட்டப்பட்டு,ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

குற்றங்கள் அதிகரிக்கும்

அப்போது நீதிபதிகள், “படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வசனங்கள், காட்சிகள் ஆபாசம், இரட்டை அர்த்தங்களுடன் உள்ளன. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற டீசர்கள் இணையதளத்தில் பரவுவது எதிரான விளைவுகளை ஏற்படுத்தும். குற்றங்கள் அதிகரிக்கும்.

எனவே, இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசரை அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும்ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

இந்த மனு தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், திரைப்பட தணிக்கைக்குழு செயலர், தணிக்கைக்குழு மண்டல அலுவலர், திரைப்பட இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர்,விசாரணையை டிச.3-ம்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x