Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

தமிழ்வழியில் பயின்றோருக்கான சலுகையை முறைப்படுத்த குரூப்-1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2019-ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் முதல் நிலை மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றேன். நேர்முகத் தேர்வுப் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை.

தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் கல்விபயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்தஇடஒதுக்கீடுச் சலுகை பெற எனக்குத் தகுதியுண்டு. இருப்பினும் அந்தச் சலுகை எனக்கு வழங்கப்படவில்லை. தொலை நிலைக் கல்வியில் தமிழ் வழியில்கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்படுகிறது.

தொலை நிலைக் கல்வி இல்லாமல் நேரடியாகத் தமிழ் வழியில் கல்வி பயின்றோரை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப் - 1 பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் பயின்று, தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு பெற தமிழில் ஏதாவது ஒரு பட்டத்தை தொலை நிலைக் கல்வியில் பெறுகின்றனர். அவர்களுக்கு தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது என்றார்.

நீதிபதிகள், தமிழகத்தில் தமிழில் படிப்பவர்கள் அருகி, மருகி வருகின்றனர். அதை ஊக்குவிக்கவே இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அந்தச் சலுகைதவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தமிழ் இல்லை எனில்வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? என கேள்வி எழுப்பினர்.

பின்னர், தமிழ் வழிக்கல்விப் பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x