Published : 15 Aug 2021 03:25 AM
Last Updated : 15 Aug 2021 03:25 AM
பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில விரைவு செயற்குழுக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடர்பாக மாநில பொதுச் செயலாளர் தியோடர் ராபின்சன் கூறியதாவது:
கல்வித்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.32 ஆயிரத்து 600 கோடியை ஒதுக்கி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட சீர்திருத்தங்களை கொண்டு வரும் அரசின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பினை 12 மாதங்களாக உயர்த்தியதற்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-ம் தேதியில் இருந்து 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கியதுபோல, தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 35 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT