Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

கோயில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு - நெல்லையில் இந்து முன்னணி ஊர்வலம் :

கோயில் நகைகளை உருக்கும்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருநெல்வேலி டவுன் லாலா சத்திரமுக்கில் தொடங்கிய ஊர்வலம், நெல்லையப்பர் கோயில் வரை நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்களும், இந்து முன்னணியினரும், பல்வேறு கடவுள் வேடம் அணிந்த சிறுவர்,சிறுமியரும் பங்கேற்றனர். நெல்லையப்பர் கோயில்முன் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் இந்து முன்னணி மாநில தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயில்களில் உண்டியல்களில் செலுத்தப்படும் தங்க நகைகளை உருக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். 1977-ல் இதுபோன்று நடைபெற்றதாக கூறுவது தவறு. அவ்வாறு நடந்திருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 26-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக புதிய தமிழகம் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்போம். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு காலநிர்ணயம் செய்யக்கூடாது. நாள்முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கை இருந்தால் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x