Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM
புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில்களுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், இரவில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறும். அத்தாளநல்லூர் ஆதிமூலப் பெருமாள், திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயில், திருக்குறுங்குடி மலை நம்பி கோயில், திருநெல்வேலி மாநகரில் என் ஜி ஓகாலனி, ரெட்டியார்பட்டி, சந்திப்பு வரதராஜ பெருமாள், நெல்லை திருப்பதி, டவுணில் கரியமாணிக்க பெருமாள், நரசிங்கபெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்வார்கள். இவ்வாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று,கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதிகாலையிலேயே கோயில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோயில்களுக்கு வெளியே நின்று தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
திருநெல்வேலி அருகே திருவேங்கட நாதபுரம் வெங்கடாசலபதி கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முற்பட்டனர். ஆனால், உள்ளே செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோயிலு க்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர். கோயிலுக்குள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 7 மணியளவில் கருட வாகனத்தில் சுவாமிக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. புறப்பாடு நடைபெறவில்லை. பக்தர்களுக்கும் அனு மதியில்லை.
தூத்துக்குடி
ஆனாலும், சில பக்தர்கள் கார், வேன்களில் நவதிருப்பதி கோயில்களுக்கு வந்தனர். அவர்கள் வெளியே இருந்து கோபுரத்தை பார்த்து தரிசனம் செய்து விட்டுச் சென்றனர்.
நாகர்கோவில்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோயில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோயில், பறக்கை மதுசூதன பெருமாள் கோயில், கிருஷ்ணன்கோயில் கிருஷ்ணசாமி கோயில், வடிவீஸ்வரம் பெருமாள் கோயில், ஏழகரம் பெருமாள் கோயில், வட்டவிளை வெங்கடாசலபதி கோயில், கன்னியாகுமரி திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோயில் ஆகிய கோயில்களில் காலையில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பங்கேற்க அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளிலும் கருட சேவை திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலுக்கு செல்லவும் தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் சாலையில் 3 இடங்களில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT