Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் - 452 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : மத்திய அரசு ஊழியர்களை நுண் பார்வையாளர்களாக நியமிக்க நடவடிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 452 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இங்கு, மத்திய அரசு ஊழி யர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர்கள் இளவரசி (ராணிப்பேட்டை), சிவதாஸ் (அரக்கோணம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2 ஆயிரத்து 220 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 288 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 127 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 13 மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர்களுக்கான நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 1,410 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறும்போது, ‘‘உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 452 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப் பட்டுள்ளன. இங்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினருடன் இணைந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செயல்பட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்களை நுண் பார்வையாளர்களாக பணியமர்த்த வேண்டும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x