Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM
மின்சார பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் ராமகிருஷ்ணா ரோடு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு 2021-22 பட்ஜெட்டில் ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. 20,000 நகர்புற பேருந்துகள் இயக்கப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இத்திட்டத்தை தனியார் பங்களிப்புடன் நடத்த வேண்டும் என கூறியுள்ளது. இது பொதுப் போக்குவரத்துக்கு எதிரானது. இத்திட்டத்தை அமல்படுத்த மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற போக்குவரத்து வசதிக்கு ஒதுக்கிய தொகையை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கவேண்டும்.
மின்சார பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். தகுதிச் சான்றிதழ் வழங்கும் உரிமையை தனியாருக்கு கொடுக்கக் கூடாது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தர்ணாவில் வலியுறுத்தப்பட்டன.
இதில், கோட்ட தலைவர் செம்பான், கோட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி, அஸ்தம்பட்டி தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து பணிமனை முன்பு விரைவு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சார்பில் சங்க தலைவர் எம்.லியாகத் அலி தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், மாநில துணைப் பொதுச் செயலாளர் என். முருகேசன், மாநில உதவித் தலைவர் செல்லப்பன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT