Published : 27 Jun 2021 03:15 AM
Last Updated : 27 Jun 2021 03:15 AM

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற - 2.5 டன் மஞ்சள் பறிமுதல் : தூத்துக்குடியில் 5 பேர் கைது

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூடைகள். (அடுத்த படம்) கடத்தலில் ஈடுபட்டதாக கைதானவர்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங் கைக்கு படகில் கடத்த முயன்ற சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 2.5 டன் விரலி மஞ்சளை போலீஸார் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில்,டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தனிப்பிரிவு எஸ்ஐ வேல்ராஜ் மற்றும் போலீஸார் துறைமுகப்பகுதி கடற்கரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வேனில் இருந்துசிலர் மூட்டைகளை இறக்கி, கடற்கரையில் நின்ற படகில் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீஸாரை பார்த்ததும் அவர்கள் கடலுக்குள் குதித்து தப்பினர். வேனில் இருந்த இருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். வேன் மற்றும் படகில் நடத்தப்பட்ட சோதனையில் 84 மூட்டைகளில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 2.5 டன் விரலி மஞ்சள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

பிடிபட்டவர்கள் வேன் ஓட்டுநர் தூத்துக்குடி சிலுவைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த கோவிந்த பெருமாள்(36), உதவியாளர் சுனாமி காலனியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சேர்மராஜா(19) என்பது தெரியவந்தது. கடலில் நீந்தி தப்ப முயன்ற கீழ வைப்பாறைச் சேர்ந்த அருள் மகன் ராபிஸ்டன் (21), ஜேசு மகன் விதுஸ்டன் (20), அருள் (55) ஆகிய 3 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

விசாரணையில், தூத்துக் குடியில் இருந்து இலங்கைக்கு மஞ்சளை கடத்த முயன்றது தெரியவந்தது. 2.5 டன் மஞ்சள், வேன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என கடலோர காவல் படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x