Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM
மது போதை இளைஞரால் கடத்தப்பட்ட திருப்பூர் போக்குவரத்து காவல் வாகனம், ஊத்துக்குளி அருகே விபத்தில் சிக்கியபோது மீட்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தெற்கு போக்குவரத்து காவல் சரகத்துக்குரிய கட்டுப்பாட்டு அறை மற்றும் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு, நேற்று மதியம் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் வாகனத்தை (ஜீப்), மாநகர ஆயுதப் படை காவலர் ராஜகுரு என்பவர் நிறுத்தி இருந்தார். இந்நிலையில், அங்கிருந்து வாகனம் மாயமானது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கும், மாவட்ட போலீஸாருக்கும் போக்குவரத்து போலீஸார் தகவல் அளித்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகள் உஷார்படுத்தப்பட்டன.
ஊத்துக்குளி எஸ்.பெரியபாளையம் தாமரைக்கோயில் அருகே வெள்ளியம்பாளையத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கிச் சென்ற போலீஸ் வாகனம், திருப்பூர் நோக்கி வந்த லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில், போலீஸ் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், ஊத்துக்குளி போலீஸார் சென்று போலீஸ் வாகனத்தை கடத்தி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், பிடிபட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் (23) என்பதும், திருப்பூரில் எம்.சாண்ட் லாரியை ஓட்டி வந்ததும், மது போதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி வந்து, ஊத்துக்குளி அருகே விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
மாநகராட்சி அலுவலகம் அருகே தெற்கு காவல் கட்டுப்பாடு மற்றும் சோதனைச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வாகனத்தில் சாவி இருந்ததால், அதனை ஓட்டி வந்ததாக விஜய் தெரிவித்துள்ளார். விபத்தில் கை, கால்களில் காயம் அடைந்த விஜயை, போலீஸார் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஊத்துக்குளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT