Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

கோயில்கள் மூடப்பட்டதால் சித்ரா பவுர்ணமியன்று - சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் :

கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற தீர்த்தவாரியின்போது எழுந்தருளிய பஞ்சமூர்த்தி சுவாமிகள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டதால், சித்ரா பவுர்ணமி தினமான நேற்று பக்தர்கள் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமி தினமான நேற்று பக்தர்கள் கோயிலுக்குள் சென்று, சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று, விளக்கேற்றி வழிபட்டுவிட்டுச் சென்றனர்.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நேற்று கோயிலுக்கு வெளியே காது குத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில், சொற்ப எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் நேற்று சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ் வான தேரோட்டம் ரத்து செய்யப் பட்டதால், கோயில் உள்பிரகாரத் தில் சுவாமி புறப்பாடு மட்டும் நடைபெற்றது. கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவின் இறுதியாக நேற்று தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப் பாடும் நடைபெற்றன.

சித்ரா பவுர்ணமியன்று மாலை தொடங்கி இரவு வரை பொதுமக்கள் கோயில், பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்தினர், உறவினர்களுடன் சென்று, நிலவொளியில் அமர்ந்து நிலாச் சோறு சாப்பிடுவது வழக்கம். அதன்படி, சித்ரா பவுர்ணமியன்று வழக்கமாக கூட்டம் அதிகம் காணப்படும் தஞ்சாவூர் பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் மற்றும் அதையொட்டியுள்ள பூங்காக்கள், கரோனா பரவல் தடை காரணமாக நேற்று இரவு வெறிச்சோடி காணப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x