Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவர்களுக்கு ஏப்.29-ல் கரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும், முகவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தஞ்சாவூர் கோட்டாட்சியர் வேலுமணி தெரிவித்தார்.
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோட்டாட்சியரும், தொகுதி தேர்தல் அதிகாரியுமான வேலுமணி தலைமை வகித்தார். உதவி தேர்தல் அதிகாரியான வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார் மற்றும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்னர், கோட்டாட்சியர் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு, வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தொகுதிக்கு தலா 4 மேஜைகள் போடப்படுகின்றன. தஞ்சாவூர் தொகுதியில் 406 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளதால், தஞ்சாவூர் தொகுதிக்கு மட்டும் 29 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வேட்பாளர்களின் முகவர் கள் அனைவருக்கும் வரும் 29-ம் தேதி கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், யாருக்கும் தொற்று இருந்தால் அவர்கள் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், முகவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும், சம்பந்தப்பட்ட முகவர்களின் கையொப்பம் பெறப்பட்டு, ஒவ்வொரு சுற்றுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT