Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM

கிருஷ்ணகிரி, தருமபுரியில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை : அதிகபட்சமாக நெடுங்கல்லில் 70.4 மிமீ மழை பதிவானது

போச்சம்பள்ளியில் நேற்று காலை கனமழை பெய்தது.

கிருஷ்ணகிரி/தருமபுரி

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந் நிலையில் நேற்று முன்தினம் சூளகிரி, சின்னகொத்தூர், வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

பின்னர், நள்ளிரவில் நெடுங்கல், கிருஷ்ணகிரி நகர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை வரை பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. மழையால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மின்தடை

போச்சம்பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு 12 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. 4 மணி நேரம் மின்சாரம் தடைபட்டதால், பொதுமக்கள் அவதியுற்றனர். மேலும், அதிகாலை மழை பெய்யத் தொடங்கியதும் மீண்டும் மின்சாரம் தடைப்பட்டது. சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுங்கல்

காலை 8 மணி நிலவரப்படி நெடுங்கல்லில் அதிகபட்சம் 70.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. போச்சம்பள்ளியில் 41.6, பாரூர் 41, சூளகிரி 29, கிருஷ்ணகிரி 23.2, தேன்கனிக்கோட்டை 20, பெனு கொண்டாபுரம் 10.2, ஊத்தங்கரை 7.2, தளி 5, ராயக்கோட்டை 3.5, ஓசூர் 1 மில்லிமீட்டர் பதிவாகி இருந்தது. இதேபோல் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12 கன அடியாக இருந்தது. அணையில் 30 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

தருமபுரி

தருமபுரி, அரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை மிதமானது முதல் கனமழை பெய்தது.

ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மழை அளவு மில்லிமீட்டரில், பாப்பிரெட்டிப்பட்டி 36.2, அரூர் 6, மாரண்டஅள்ளி 4, பென்னாகரம் 5, ஒகேனக்கல்லில் 28 மி.மீ. பதிவாகி இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x