Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலத்துக்கு குட்கா பொருட்களை கடத்திச் செல்ல முயன்ற 2 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகா, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம்வழியாக பல்வேறு மாவட்டங் களுக்கு குட்கா பொருட்கள் கடத்திச் செல்வதாக, மாவட்ட எஸ்பி பண்டிகங்காதருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே கிருஷ்ணகிரி நகர காவல் உதவி ஆய்வாளர் தயாளன் மற்றும் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே சந்தேகப்படும் படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. மேலும், சேலத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், பெங்களூரு துடுக்கனஅள்ளி கண்பத்ராம் (24), ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சாட்பலராம் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும், ரூ.1.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை காருடன் பறிமுதல் செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT