Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஆய்வு செய்த ஆட்சியர் ம.கோவிந்தராவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில், தினமும் சராசரியாக 100-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, அதிகளவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் உள்ள பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, கரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்து வருகிறோம்.
மேலும், 3 நபர்களுக்கு மேல் கரோனா தொற்று உறுதியான பகுதியை சுகாதாரத் துறைச் செயலரின் அறிவுறுத்தலின்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, கண்காணித்து வருகிறோம்.
தொடர்ந்து, நாளொன்றுக்கு 2,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன், 60 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மேலும், சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்றும், பரிசோதனை செய்து வருகின்றனர்.
வல்லத்தில் உள்ள கரோனா பாதுகாப்பு மையம் மீண்டும் திறக்கப்பட்டு, தற்போது 127 பேர் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைக் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 68,607 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா முதல் அலையின்போது, பொதுமக்கள் அனைவரும் முறையாக முகக்கவசம் அணிந்ததால், மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் இருந்தது. அதேபோல, தற்போது 2-வது அலையின் வேகம் அதிகளவில் இருப்பதால், பொதுஇடங்களில் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT