Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

வாடகை செலுத்த காலஅவகாசம் வழங்கக்கோரி - கடைகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் :

ஊத்தங்கரையில் வாடகை செலுத்த கால அவகாசம் கேட்டு பேரூராட்சி கடைகள் முன்பு கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் வாடகை செலுத்த கால அவகாசம் கேட்டு கடைகள் முன்பு கருப்புக் கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பழைய திருப்பத்தூர் சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமாக 20 கடைகள் உள்ளன. இதில், உள்ள கடைகளில் காய்கறி, மளிகை கடைகள், செல்போன் கடைகள் என பல தரப்பட்ட வியாபாரிகள் கடைகளை வாடகைக்கு எடுத்து வணிகம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல மாதங்களாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் கடைகளைத் திறந்து வியாபாரிகள் வணிகம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 2 மாதம் வாடகையைக் குறைத்து 10 மாத வாடகையைச் செலுத்த வேண்டும் என வியாபாரிகளுக்கு, பேரூராட்சி நிர்வாகம் நிபந்தனை விதித்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கடைகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் கடைகள் பூட்டப்பட்டு, எங்களது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

பேரூராட்சி நிர்வாகம், 2 மாத வாடகையை மட்டும் எங்களுக்கு தள்ளுபடி செய்து, மீதமுள்ள 10 மாத வாடகையை உடனே கட்ட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் நாங்கள் 6 மாதமாவது கடை வாடகைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். வாடகை கட்ட மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே வேறு வழியின்றி நாங்கள் கடைகள் முன்பாக கருப்புக் கொடி ஏற்றி உள்ளோம்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x