Published : 05 Feb 2021 03:18 AM
Last Updated : 05 Feb 2021 03:18 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அபராதம் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால் கால் நடைகளின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கால்நடை கள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கி உயிரிழக்கவும் நேரிடுவதாக புகார்கள் எழுந்துள் ளன. எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப் போர் தங்களது கால்நடைகளை சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மேய்ச்சலுக்காக தன்னிச்சையாக சுற்றித்திரிவதை அனுமதிக்கக்கூடாது.

தன்னிச்சையாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க உள்ளாட்சி துறையினருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அவ்வாறு பிடிபடும் கால்நடைகளின் பராமரிப்பு மையங்களில் ஒப்படைக்கப்படும். மேலும், கால்நடைகளின் உரிமை யாளர்களுக்கு முதல் முறையாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும், 2-வது முறை கால்நடைகள் பிடிபட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரமும், 3-வது முறையாக பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

3-வது முறைக்கு மேலும் கால்நடைகள் சாலைகளில் தன்னிச்சையாக சுற்றித்திரிவது தெரியவந்தால், அந்த கால்நடைகள் கைப்பற்றப்பட்டு பொது ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் தொகை அரசு கரூவூலத்தில் செலுத்தப்படும். அதுமட்டுமின்றி கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

இதுதவிர, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலை விபத்து நேரிட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால், கால்நடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x