Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM

திருப்பரங்குன்றம் கோயிலில் சஷ்டி விழா பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விரதம் இருக்கவும், கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவில் பங்கேற்கவும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் துணை ஆணையர்(பொறுப்பு) மு.ராமசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.15-ம் தேதி தொடங்குகிறது. அன்று சுவாமிக்கு காப்பு கட்டப்படும். நவ.19-ல் வேல்வாங்குதல், நவ.20-ல் சூரசம்ஹாரம் நடைபெறும்.

அதன்பின் கார்த்திகை திருவிழாவுக்கான கொடியேற்றம் நவ.21-ம் தேதி காலை 7.15 மணிக்கு நடைபெறும். நவ.28-ல் பட்டாபிஷேகம் நடைபெறும். நவ.29-ம் தேதி மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்துக்குள் நடைபெறும். சுவாமி வீதி உலா கோயில் உள் பிரகாரத்தில் நடக்கும். கோயில் வளாகத்தில் தங்கி சஷ்டி விரதம் மேற்கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதேபோல், தீபம் ஏற்றும் நாளில் மலை மீது ஏறிச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ராமலிங்கம் கூறுகையில், சஷ்டி மற்றும் தீபம் ஏற்றும் விழாக்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். அனுமதிக்க மறுத்தால், தடையை மீறி பங்கேற்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x