Published : 11 Dec 2021 03:10 AM
Last Updated : 11 Dec 2021 03:10 AM
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் 2.5 ஹெக்டேரில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சதுப்பு நில சூழலியல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சதுப்பு நிலம் ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருப்பதுடன், சிறு, குறு தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் வசிக்கக்கூடிய பகுதியாகும். இந்த நிலம் வெள்ளத்தை தணித்தல், நிலத்தடி நீர் சேமிப்பை மேம்படுத்துதல், உயரிய பல்லுயிர்களை ஆதரித்தல், பொழுதுபோக்கு, கல்வி, ஆராய்ச்சி பணிகளுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்கு உதவுகிறது.
தமிழக வனத் துறையின் கட்டுப்பாட்டில் 700 ஹெக்டேர் பரப்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி சென்னை மாநகரின் இடையில் இயற்கை அழகுடன் காணப்படுகிறது. சென்னை மாநகரில் பெருமழைக் காலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வெள்ள நீர் வடிகால் பகுதியாக இருந்து வருகிறது. இந்த சதுப்பு நிலம் 231 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள நீரை ஒக்கியமடுவு, கோவளம் ஆகிய நீர் வெளியேற்றும் 2 கால்வாய்கள் மூலம் வங்கக்கடலில் கலக்க உதவுகிறது.
இந்த சதுப்பு நிலப் பகுதியில் 176 வகையான பறவை இனங்கள், 10 வகை பாலூட்டிகள், 21 வகை ஊர்வன இனங்கள், 10 வகை நில நீர் வாழ்வினங்கள், 50 வகை மீன் இனங்கள், 9 வகை நத்தை இனங்கள், 5 வகை ஒட்டு மீன் இனங்கள், 14 வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆகிய உயிரினங்களின் வாழ்விடமாகவும், ஒட்டுமொத்தமாக 459 வகையான தாவரங்கள், விலங்கினங்களின் பரவலுக்கு உதவியாக அமைந்துள்ளது. கடந்த 2019-20 ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 2.65 லட்சம் பறவைகள் இந்த சதுப்பு நிலப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடமேற்கு பகுதியில் பள்ளிக்கரணை சதுப்பு நில சூழலியல் பூங்கா அமைக்க தமிழக அரசால் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை பாதுகாக்க 1,700 மீட்டர் தூரத்துக்கு பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டதுடன், மக்கள் பார்வைக்காகவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் நோக்கிலும் பசுமையான பொது இடம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் பார்வையாளர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள 2 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை, சதுப்பு நிலத்தின் தாவரங்கள், விலங்கினங்கள் பற்றிய விவரம், மீன் இனங்கள், பட்டாம்பூச்சி வகை, பறவை இனங்கள், பல்லுயிர் பரவல், அதன் வளம் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் கருத்தியல் அடையாளங்கள், மாதிரிகள், சூழலியல் பூங்காவில் அழகியலை மேம்படுத்த வேங்கை, அரசு, செஞ்சந்தனம், சந்தனம், குமிழி, மகாகனி, வேம்பு, நீர்மருது, இலுப்பை போன்ற மண்சார்ந்த 5,000 மரக் கன்றுகள் நடைபாதையின் இருபுறமும் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளத் தடுப்பு பணிக்காக தற்போது ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி பராமரிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ‘ராம்சார் சாசனப்படி’ ஈரநிலமாக அறிவிக்கை செய்ய மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆண்டுதோறும் இந்த நிலப் பகுதிக்கு வரும் வெளிநாடு, உள்ளூர் வலசை பறவை இனங்களின் பாதுகாப்பு, மேலாண்மையை கருத்தில் கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் பரப்பில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சதுப்பு நில சூழலியல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு, வனத் துறை செயலர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அசோக் உபரேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT