Published : 25 Sep 2021 03:34 AM
Last Updated : 25 Sep 2021 03:34 AM

அரசு, தனியார் துறை நிறுவனங்களில் - தொழில்பழகுநர் பயிற்சி பெற சேலத்தில் 4-ம் தேதி முகாம் :

சேலம்

‘அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் தொழில்பழகுநர்களை சேர்த்து அவர்களது தொழிற்சாலைகளில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முகாம் அக்.4-ம் தேதி நடைபெறுகிறது,’ எனவும் சேலம் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் ஈஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன்படி 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தொழில்பழகுநர்களை ஆண்டு தோறும் சேர்த்து அவர்களது தொழிற்சாலைகளில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்க வேண்டும். பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மாதம் ரூ.8050 உதவித்தொகையுடன் பழகுநர் பயிற்சி அளிக்க வேண்டும்.

பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக தொழிற்சாலைகள் மற்றும் தொழில்பயிற்சியில் பயிற்சி பெறும் மாணவர்களை இணைக்கும் வகையில் ஆண்டு தோறும் அந்தந்த மாவட்டங்களில் தொழில்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் காலியாக உள்ள தொழில்பழகுநர் இடங்களை பூர்த்தி செய்யும் விதமாக 2021 -ம் ஆண்டுக்கான தொழில்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் அக்டோபர் 4-ம் தேதி சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது.

இதுநாள் வரை பழகுநர் பயிற்சி முடிக்காத, மாணவர்கள் உண்மை சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x