Last Updated : 19 Sep, 2021 03:16 AM

 

Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி மூலம் மேற் கொள்ளப்பட்டது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 122 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 204 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 1,731 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதற்கட்டமாக வரும் 6-ம் தேதி அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கு, 621 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 2-ம் கட்டமாக வரும் 9-ம் தேதி களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு, 565 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.

பணி ஒதுக்கீடு

முதற்கட்ட வாக்குப்பதிவு மையங்களில் 5,013 வாக்குப்பதிவு அலுவலர்களும், 2-ம் கட்ட வாக்குப்பதிவின்போது 4,511 வாக்குப்பதிவு அலுவலர்களும் பணிபுரியவுள்ளனர். இவர்களுக் கான பணி ஒதுக்கீடு கணினி மூலம் நேற்று நடைபெற்றது.

இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வரும் 24-ம் தேதி கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்குநேரி அருகே தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் தொழிநுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதுபோல், பாளையங் கோட்டை அரசு சட்டக் கல்லூரி, பாப்பாக்குடி அருகே இடைகால் மெரிட் தொழிநுட்ப கல்லூரிகள், ராதாபுரம் என்.வி.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் திருச்சிலுவை (பாத்திமா) நடுநிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இதில் அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும்.

பணி ஆணை பெற்றவர்கள் பயற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு, சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தேசிய தகவலியல் மைய அலுவலர் தேவராஜன், தொழிநுட்ப இயக்குநர் ஆறுமுக நயினார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) சசிகலா, (ஊரக உள்ளாட்சி தேர்தல்) ராம்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x