Published : 04 Sep 2021 03:16 AM
Last Updated : 04 Sep 2021 03:16 AM
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் மானாவாரியாக சுமார் 45,000 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. விவசாயிகளுக்கு லாபம் ஈட்டித்தரும் இப்பயிரில் கடந்த 3 ஆண்டுகளாக படைப்புழு தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.
மக்காச்சோளப் படைப்புழுவின் ஒரு பருவம் கூட்டுப் புழுவாக மண்ணில் நடக்கிறது. கூட்டுப்புழுவில் இருந்து தாய் பூச்சிகள் வெளிவருகின்றன. ஒரு தாய் பூச்சி இரண்டாயிரம் முட்டைகளை இடுகிறது. எனவே, மண்ணில் நடைபெறும் கூட்டுப்புழுபருவத்தை கட்டுப்படுத்த அனைத்து விவசாயிகளும் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். ஆழமாக உழுவதன் மூலம் மண்ணில் புதைந்துள்ள கூட்டுப் புழுக்கள் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு சூரியவெப்பத்தாலும், பறவைகளுக்கு இரையாகவும் அழிக்கப்படுகிறது. இதனால் 60 முதல்70 சதவீத தாக்குதல் குறைக்கப்படுகிறது.
மேலும் கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் விவசாயிகள் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். வேப்பம் புண்ணாக்கிலிருந்து சுரக்கும் எண்ணெய் கூட்டுப் புழுக்களின் சுவாசிக்கும் துவாரங்களை அடைத்து அவற்றை கொன்று விடும். மேலும், வேப்பம் புண்ணாக்கில் உள்ள வேதிப் பொருள் கொஞ்சம்கொஞ்சமாக பயிரின் காலம் முழுவதும் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்துகிறது. விவசாயிகள் தாங்களே சொந்தமாக வேப்பங் கொட்டைகளை சேகரித்து உலர்த்தி வேப்பம் புண்ணாக்கு தயார் செய்யலாம் அல்லது வேப்பம் எண்ணெய் ஒரு ஏக்கருக்கு 4 முதல்5 லிட்டர் மணலுடன் கலந்து இடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்காச்சோளப் படைப்புழுவின் ஒரு பருவம் கூட்டுப் புழுவாக மண்ணில் நடக்கிறது. கூட்டுப்புழுவில் இருந்து தாய் பூச்சிகள் வெளிவருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT