Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM

செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள - அனைத்து பழைய கட்டிடங்களின்உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவு :

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்ததையடுத்து மருத்துவமனையில் உள்ள அனைத்து கட்டிடங்களின் உறுதித்தன்மையையும் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவமனை முதல்வர் பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

`இந்து தமிழ்' நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் இச்சம்பவத்தால் சிகிச்சை பெற வருவோரும், சிகிச்சை பெற்று வருவோரும் அச்சமடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு உள்ள பல கட்டிடங்கள் 50 ஆண்டுகள் பழமையானவை. எனவே, அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக, `இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமார் மருத்துவமனையில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் ஒரு வாரத்துக்குள் ஆய்வு செய்து கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்பணி இன்றுமுதல் தொடங்கும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x