Published : 07 Aug 2021 03:19 AM
Last Updated : 07 Aug 2021 03:19 AM
ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைகாவலர் (ஆண், பெண் மற்றும்மூன்றாம் பாலினம்), சிறைக்காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி (ஆண்) விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துதேர்வு ஏற்கெனவே கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 1,662 ஆண்விண்ணப்பதாரர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1,231 ஆண் விண்ணப்பதாரர்கள் என, மொத்தம் 2,893பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு தேர்வு தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது.
ரயில்வே டிஐஜி ஜெயகவுரி மேற்பார்வையில் இத்தேர்வுகள் நடைபெற்றன. பேரூரணி காவலர்பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையிலான அதிகாரிகள் தேர்வை நடத்தினர்.
முதலில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து உயரம், மார்பளவு ஆகியவை கணக்கீடு செய்யப்பட்டன. பின்னர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இந்த தேர்வில் மொத்தம் 2,237 பேர் பங்கேற்றனர். அவர்களில் 1,517 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான உடல்திறன் தேர்வு கடந்த 3-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தேர்வின் நிறைவு நாளான நேற்று முன்னாள் படைவீரர்களுக்கான உடல்திறன் தேர்வு நடைபெற்றது. இதில் 199 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்றுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வந்த தேர்வு முகாம் நிறைவு பெற்றது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த விண்ணப்பதாரரின் உறவினர்கள் தேர்வு மையத்துக்கு வந்து எழுத்து பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தான் முடிவு செய்யும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT