Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ரூ.5.45 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, கடலோரப் பகுதிமாணவர்களுக்கான ஸ்டெர்லைட் கல்வித் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி பகுதிகடலோர மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஸ்டெர்லைட் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.4,000, 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.6,000, 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு 7,000, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ரூ.9,000 என, 100 மாணவ, மாணவியருக்கு ரூ.5.45 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
உதவித்தொகையை வழங்கி, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஏ.சுமதி கூறும்போது, ``மாணவர்கள்தான் இந்த சமுதாயத்தின் நம்பிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளனர். அவர்கள் தங்கள் கல்வி இலக்குகளை அடைவதற்கு இந்த முயற்சி ஓர் எளிய உதவியாகும். இதன் மூலம், அவர்களுக்கு தங்களது கனவுகளை அடையமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்” என்றார் அவர்.
தாமிர வித்யாலயா மற்றும் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 7 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2-வது கட்டமாக 7 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT