Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM
ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில், அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும், என ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.
இந்நிலையில் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு அருகே கார்டன் பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது.
இதற்கான கட்டுமான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:
அறிவியல் தொழில்நுட்பப்பூங்கா 1.75 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
இங்கு மாதிரி ராக்கெட், ராக்கெட் ஏவுதளம், டைனோசர், யானை சிலைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல்சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த பூங்கா அமைகிறது. கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT