Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM
இலங்கையில் இருந்து ஆட்களை சட்டவிரோதமாக தூத்துக்குடிக்கு அழைத்து வந்த 2 பேரை மதுரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், கடல் அட்டை,வெங்காய விதை, பீடி இலை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையே சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச் செல்லும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையை இங்கிலாந்தை சேர்ந்த ஜோனதன் தோர்ன் என்பவர் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தனமாக செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்இலங்கையைச் சேர்ந்த 27 பேர் மதுரை அருகே சுற்றித்திரிவது தெரியவந்தது. இத்தகவலறிந்த கியூ பிரிவு போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்து தூத்துக்குடி வந்து, அங்கிருந்து மதுரைக்கு வந்தது தெரியவந்தது.
அவர்கள் 27 பேரில் சிலரை மட்டும் விசாரணைக்காக, மதுரைகியூபிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீஸார், தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். கள்ளத்தனமாக படகில்வந்த போது அவர்கள் எந்த பகுதியில் தரையிறங்கினர், எங்கு தங்கியிருந்தார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர். அப்போது, இவர்கள் 27 பேரையும் இலங்கையில் இருந்து ஒரு படகில் அழைத்து வந்துள்ளனர். நடுக்கடலில் வைத்து, தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொரு படகுக்கு மாற்றியுள்ளனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கரையேறியுள்ளனர். பின்னர், 27 பேரும்தூத்துக்குடியில் தங்க வைக்கப்பட்டு, ஊரடங்கு நேரத்தில் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இலங்கையைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அழைத்து வந்ததாக, தூத்துக்குடியை சேர்ந்த கருத்தகண்ணு, சாக்ரடீஸ் ஆகிய 2 பேரை கியூ பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். அவர்களை மதுரைக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT