Published : 27 Jun 2021 03:13 AM
Last Updated : 27 Jun 2021 03:13 AM

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள - விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் :

வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர்.

சேலம்

வேளாண் திருத்த சட்டம், மின்சார திருத்த சட்டம் உள்ளிட்டவைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், சேலம் கிழக்கு தலைமை தபால் அலுவலகம் எதிரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், சிஐடியு நிர்வாகி தியாகராஜன், விவசாய சங்க நிர்வாகி ராமமூர்த்தி மற்றும் அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை விரைந்து வழங்க வேண்டும். கரோனா தொற்று காலத்தில் இரவு, பகலாக உழைத்து வரும் மத்திய, மாநில, தனியார் துறை ஊழியர்கள் அனைவரையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நாமக்கல்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் மத்திய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் என்.தனசேகரன் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், தொமுச மாவட்டசெயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் எருமப்பட்டி, பள்ளிபாளையம் மற்றும் குமார பாளையத் திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் பொன்னையன், தமிழக விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் துளசி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் தங்கராஜ் டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் பொன் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக புறநகர் கிளை முன்பு நேற்று மத்திய அரசைக் கண்டித்து, அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச தருமபுரி மண்டல பொது செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் பரமசிவம், துணைத் தலைவர்கள் ஞானசேகர், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x