Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM
சேலம் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி கரோனா பரிசோதனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சிப் பகுதி களில் கரோனா பரிசோதனை அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி யின் சிறப்பு மையங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பரிசோதனை நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் அங்கீகரிக்கப் பட்ட ஆய்வு கூடங்கள் வேறு மாவட்டங்களில் மாதிரிகளை சேகரிக்க மாவட்ட பொது சுகாதாரத் துறையினரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் மாதிரிகளை சேகரிக்கும் நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநர் தனியார் ஆய்வகங் களில் ஆய்வு மேற்கொண்டபோது, செவ்வாய்ப்பேட்டை மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மையம் உரிய அனுமதியின்றியும், உரிய கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொண்டதும், எடுக்கப்பட்ட மாதிரிகளை சுகாதார துறைக்கு முழுமையாக தெரிவிக்காமல் இருந்ததும், இணையதளத்தில் முறையாக பதியாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பரிந்துரையின் பேரில், ஆய்வகத் துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலும் செயல்படும் கரோனா பரிசோதனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT