Published : 18 Jun 2021 03:16 AM
Last Updated : 18 Jun 2021 03:16 AM

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம் :

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக் கோரி பென்னாகரத்தில் தனது வீட்டின் எதிரே பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

சேலம்

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் பாமக-வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தொற்று குறையாத சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.இந்நிலையில், நேற்று டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, அஸ்தம்பட்டியில் உள்ள பாமக அலுவலகம் அருகே பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மதுக்கடைகளால் தமிழகத்தில் கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதை தடுக்க முழு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு இடங் களில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோட்டில் பாமக ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட பாமக சார்பில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாவட்ட செயலாளர் பிரபு, மாநில துணைத்தலைவர் எஸ்.எல். பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொ.வை ஆறுமுகம், ராஜேந்திரன், அருள்மொழி, மாநகரச் செயலாளர் எஸ் .ஆர் .ராஜீ, மூர்த்தி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஈரோடு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாமக நிர்வாகிகள் அவரவர் வீடுகளின் முன்பு, டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தும் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரியில்

தருமபுரி மாவட்டம் பென்னா கரத்தில் பாமக மாநில தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தலைமையில் பாமக அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் இளங்கோ தலைமையில் பாமகவினர் கருப்புக்கொடியுடன் தங்களது வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஓசூர் சீதாராம் நகரில் பாமக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

இதில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல மத்திகிரி, பாகலூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x